ஆன்மிகம்

பிரச்சனைகளை தீர்த்து யோகம் தரும் ராகு - கேது

Published On 2017-07-18 08:38 GMT   |   Update On 2017-07-18 08:38 GMT
ராகு-கேதுக்களால் நன்மை பெற, உங்கள் சுய ஜாதகத்தில் ராகு இருக்கும் இடம், சாரபலம் பார்த்து, அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம்.
நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் பாம்புக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் வான்வெளியின் சஞ்சாரத்தில் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், நாம் வாழ்வில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம்.

'கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை, கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை' என்பது பழமொழி. எதைக்கேட்டாலும் அள்ளி அள்ளிக் கொடுப்பதில் தனக்கு நிகரில்லை என்று நிரூபித்துக் காட்டியவன் கர்ணன். அப்படிப்பட்ட கர்ணனைப்போல் நவக்கிரகங்களில் அள்ளிக் கொடுக்கும் கிரகம் ராகுவாகும். எனவே தான் 'ராகுவைப்போல கொடுப்பானுமில்லை' என்று அனுபவ வாக்காக முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ராகு- கேதுக்களுக்குள் சகல கிரகங்களும் அடைபட்டுப்போய் ஒருவரது ஜாதகம் அமைந்தால், அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த காலசர்ப்ப தோஷம் என்பதை, காலசர்ப்ப யோகமாக மாற்றக்கூடிய ஆற்றல் சர்ப்ப சாந்தி பரிகாரங்களை முறையாகச் செய்பவர்களுக்கு உண்டு. பொதுவாக சர்ப்ப தோஷம் அமைந்தவர்களுக்கு ஏராளமான தடைகள் வந்து கொண்டேயிருக்கும்.

ஒருவரது லக்னத்தில் ராகு - கேதுக்கள் பலம் பெற்றால், தனித்து வாழும் அமைப்பு உண்டாகிறது. குடும்ப ஸ்தானத்தில் ராகு-கேதுக்கள் பலம் பெற்றிருந்தால் குடும்பம் அமைவதில் தாமதத்தைக் கொடுக்கிறது. அப்படியே அமைந்தாலும் குடும்பத்துடன் இணைந்து வாழமுடியாத அமைப்பு ஏற்படுகிறது. கொடுக்கல்- வாங்கல்களில் சிக்கல்களும், ஏமாற்றங்களும் உருவாகிறது. குடும்ப உறுப்பினர்களோடு அடிக்கடி சண்டை- சச்சரவுகளை சந்திப்பவர்களுக்குரிய ஜாதகத்திலும், குடும்ப ஸ்தானத்தில் தான் ராகு-கேதுக்கள் பலம்பெற்றிருக்கும்.

சகாய ஸ்தானத்தில் ராகு- கேதுக்கள் பலம் பெற்றிருந்தால், எந்தக் காரியத்தையும் விரைந்து முடிக்க இயலாது. சிரமப்பட்டே முடிக்க முடியும். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவது அரிது.

தாய் ஸ்தானத்தில் ராகு-கேதுக்கள் பலம்பெற்றிருந்தால், தாயின் ஆதரவு குறையலாம். வீடு, இடம் போன்றவற்றை வாங்குவதில் பிரச்சினைகள் ஏற்படலாம். நினைத்த படிப்பை படித்து முடிக்க விடாமல் நிம்மதி இழக்கச்செய்யலாம்.

புத்திர ஸ்தானத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால், பிள்ளைகள் பிறப்பதில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை விற்றுவிடும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் இளம் வயது காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் மனக்கலக்கத்தை உருவாக்கும்.

வியாதிகள் ஸ்தானத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் தோல் வியாதிகள் உருவாகலாம். உடல் நலத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். விஷ சந்துக்களை அடிக்கடி சந்திக்க நேரிடும். கடன் சுமையும் அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்க வேண்டியதிருக்கும். சங்கிலித் தொடர்போல் கடன்சுமை கூடும்.

களத்திர ஸ்தானத்தில் ராகு- கேதுக்கள் இருந்தால், வாழ்க்கைத் துணை அமைவதில் தாமதம் ஏற்படும். அப் படியே அமைந்தாலும் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். சர்ப்ப சாந்திகளை, யோகபலம் பெற்ற நாளில் முறைப்படி செய்தால் இல்லறம் நல்லறமாக அமையும். பொதுவாக பொருத்தம் பார்க்கும் பொழுதே முக்கியப் பொருத்தங்கள் நன்றாக இருக்கின்றதா? என்று பார்த்துச் செய்வதுநல்லது.

அஷ்டமத்தில் பாம்பு கிரகங்கள் சஞ்சரித்தால், தொழிலில் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட வழிபாடுகளை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். எடுக்கும் முடிவுகளை யோசித்துச் செய்தால் தான் வெற்றி கிடைக்கும். நிலையற்ற வேலையும், அடிக்கடி ஊர் மாற்றமும், இடமாற்றமும், நிரந்தரமில்லாத தன்மையும் உருவாகும்.

தகப்பனார் ஸ்தானத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால், தந்தை வழிச் சொத்துக்களைப் பெறுவதில் பிரச்சினை உருவாகும். சகோதரர்களுக்கு பெற்றோர்கள் அனுகூலம் செய்யலாம்.

தொழில் ஸ்தானத்தில் பாம்பு கிரகங்கள் அமைந்திருந்தால், அது எந்தக் கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ, எந்தக் கிரகத்தால் பார்க்கப்படுகிறதோ, எந்தக் கிரகத்தின் சாரத்தில் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து, தொழில் செய்தால் லாபம் கிடைக்கும்.

லாப ஸ்தானம் எனப்படும் பதினோராமிடத்தில் பாம்பு கிரகங்கள் பலம் பெற்றிருந்தால், வருமானம் இருமடங்காக வந்து சேரும். தெரியாத தொழிலில் ஈடுபட்டால் கூட உரிய விதத்தில் லாபம் கிடைக்கும்.

விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்தால், எதிர்பாராத விரயங்களை ஏராளமாகச் சந்திக்க நேரிடும். வரவிற்கு மீறிய செலவு ஏற்படும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தடுமாற்றம் உருவாகும்.

இப்படியெல்லாம் ராகுவைப் பற்றியும், கேதுவைப் பற்றியும் முன்னோர்கள் சொல்லி வைத்திருந்தாலும், 'ஞான காரகன்' என்று போற்றப்படும் கேது, ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் சிறந்த அறிவாளியாகவும், மேதையாகவும், உலகப்புகழ் பெற்றவராகவும் விளங்குவார். கேது கல்வியை வழங்குவார். ராகு செல்வத்தை வழங்குவார். கற்ற கல்வியின் மூலம் உற்றார், உறவினர்களும், மற்றவர்களும் பாராட்டும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பார்.

இந்த ராகு-கேதுக்களால் நன்மை பெற, உங்கள் சுய ஜாதகத்தில் ராகு இருக்கும் இடம், சாரபலம் பார்த்து, அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். நவக்கிரகத்தில் உள்ள ராகு- கேதுவையும் வழிபடலாம்.
Tags:    

Similar News