ஆன்மிகம்

குடும்பத்தில் பிரச்சினை, திருமண தடை நீக்கும் பழனி பாதயாத்திரை

Published On 2017-02-09 05:36 GMT   |   Update On 2017-02-09 05:36 GMT
நல்ல வரன் கிடைக்க வேண்டும், குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு. அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக் கடங்காத பாதயாத்திரை கூட்டம். தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே பாதயாத்திரையாகச் சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

உலகம் முழுவதும் இந்த பாதயாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைப்பிடித்தனர். பாதயாத்திரை வரும் போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள்.

அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் பேசி முடிப்பார்கள். நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது. பாதயாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.

முருகனிடம் இடும்பன் வரம் கேட்டபோது, நான் மலைகளை காவடி ஏந்தியது போல காவடி ஏந்தி வரும் பாதயாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும் என்றான். இதை ஏற்று காவடி ஏந்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார்.

நோய் தீர வேண்டும், நல்ல வரன் கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள். சமீப காலமாக சென்னையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

Similar News