ஆன்மிகம்

வாஸ்து குறைகளை நீக்கும் பூலோகநாத சுவாமி

Published On 2017-02-07 08:34 GMT   |   Update On 2017-02-07 08:34 GMT
பூலோகநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான ஸ்ரீ பூலோகநாத சுவாமியையும் ஸ்ரீ ஜெகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கும்.
வீடு கட்டுதல், பழைய வீட்டின் அமைப்பு, வியாபார நிறுவனங்களின் அமைப்பு, நோக்கும் திசை, அறைகளின் நீளம், அகலம் என அனைத்திலும் வாஸ்து தோஷம் உள்ளதா? எனப் பார்ப்பது தற்போது அனைவரும் கடைப்பிடித்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது.

வாஸ்து நாயகருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பூலோகநாத சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் பூலோகநாத சுவாமிதான், வாஸ்து நாயகராகத் திகழ்கிறார். இவர் வாஸ்து தோஷங்களை நீக்கும் வல்லமை படைத்தவர். இவரிடம் வாஸ்து தொடர்பான குறைபாடுகளைக் கூறி பிரார்த்தனை செய்துக் கொண்டால் அவை அறவே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் வாஸ்து நாட்களில், சிறப்பு வாஸ்து ஹோமம் நடத்தப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களும், பழைய, புதிய வீட்டில் தோஷம் இருப்பதாக கருதுபவர்களும், வாஸ்து நாட்களில் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் வாஸ்து தோஷம் நீங்கும். மற்றவர்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும்.

வாஸ்து ஹோமத்தன்று, பூமிக்கு அடியில் விளையும் பெரும்பாலான கிழங்குகளைக் கொண்டு, விசேஷ கதம்ப கிழங்குகள் சாதம் தயாரித்து வாஸ்து பகவானுக்கு படையல் இடப்படுகிறது. பின்னர் இதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர்.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். வாஸ்து தலமான இந்த ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான ஸ்ரீ பூலோகநாத சுவாமியையும் ஸ்ரீ ஜெகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கி அவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நிதர்சனமான உண்மையே!

Similar News