ஆன்மிகம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய கொடியேற்றத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-07-27 07:08 IST   |   Update On 2016-07-27 07:08:00 IST
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பனிமய மாதா திருவுருவ பவனி நடந்து வருகிறது. தற்போது 434-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலையில் கொடிபவனி நடந்தது. திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து பவனியாக கொண்டு வரப்பட்ட கொடி ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்கள் காணிக்கையாக எடுத்து வரப்பட்டது.

நேற்று காலையில் 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2-வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி மேள, தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து காலை 8.55 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பிஷப் இவோன் அம்புரோஸ் கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி வருகிற 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது. தொடர்ந்து 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது.

Similar News