ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இயேசு

கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்

Published On 2022-04-12 05:26 GMT   |   Update On 2022-04-12 05:26 GMT
கர்த்தர் உங்கள் பிதாவாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கலாம். கைரேகைப்படியோ அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ ஒன்றும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை.
“வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக் குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக் குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்” (ஏசாயா 45:11).

வரும் காலம் எப்படி இருக்குமோ? என் குடும்பம் எப்படி செல்லுமோ? என் பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வரும்காலம் ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது.

வேதம் சொல்லுகிறது “அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்’’ (தானி. 2:22).

கர்த்தர் உங்கள் பிதாவாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கலாம். கைரேகைப்படியோ அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ ஒன்றும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை.

பாபிலோன் ராஜாவுக்கு முன்பு தானியேல் சொன்னார்: “தேவன் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத்தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்’’ (தானி. 2:21).

அந்த அருமை ஆண்டவர் உங்களைப் பார்த்து, நீங்கள் எனக்கு கட்டளையிடுங்கள் என்று சொல்லுகிறார். சற்று சிந்தித்துப் பாருங்கள். அண்டசராசரங்களையும் ஜீவராசிகளையும் படைத்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் இயங்க வைத்திருக்கும் ஆண்டவருக்கு நீங்கள் எப்படி கட்டளையிடுவது. அது தான் நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்ற உரிமை. அவர் உங்களுக்கு பிதா என்கிற பாசம். உங்களுக்கும், ஆண்டவருக்கும் இடையிலுள்ள ஐக்கியமே அந்த சிலாக்கியத்தை ஏற்படுத்துகிறது.

கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, அவருடைய குடும்பத்தில் வந்து சேரும்போது கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறவராக இருக்கிறார்.

கர்த்தருக்கு நீங்கள் கட்டளையிடும்படிதான் அவர் உங்களுக்கு அதிகாரங்களையும் ஆளுகையையும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். நோய்களுக்கு நீங்கள் கட்டளையிடும் போது அவைகள் நீங்குகிறது. அசுத்த ஆவிகளுக்கு கட்டளையிடும் போது அவைகள் ஓடி மறைகிறது. பொல்லாத மனுஷருக்கு கட்டளையிடும் போது அவர்கள் மறைந்து போகிறார்கள். திமிர்வாதக்காரனை நோக்கி நீ உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னால் அவன் நடந்து போவான்.

பிரியமானவர்களே, ஆண்டவர் உங்களுக்குப் பாராட்டின அவருடைய கிருபைகளை எல்லாம் எண்ணிப்பாருங்கள். அவருடைய குடும்பத்தில் என்றென்றும் நிலைத்திருப்பீர்களாக. நீங்கள் அவரிடத்தில் ஜெபிப்பதும், அவர் உங்களுக்குப் பதிலளிப்பதும், உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை எல்லாம் அவர் உங்களுக்கு நிறைவேற்றித் தருவதும் எத்தனை பாக்கியமான காரியம்!

“நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்’’ (1 சாமு.12:24).

போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை.
Tags:    

Similar News