ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை பவனி நடந்த போது எடுத்த படம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி

Published On 2022-04-11 03:21 GMT   |   Update On 2022-04-11 03:21 GMT
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்று இருப்பதும், வங்க கடலோரம் அமைந்து இருப்பதும் வேளாங்கண்ணி பேராலயத்தின் சிறப்பு அம்சங்களாகும். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி முதல் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது. தவக்காலம் தொடங்கும் நாள் ‘சாம்பல் புதன்' ஆகும். தவக்காலத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிளில் பேரணியாகவும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வாழ்த்து பாடல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த குருத்தோலை பவனியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர். இந்த பவனி பேராலயத்தின் பின் பகுதியில் நிறைவடைந்தது. குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நாள் முழுவதும் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது.

இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாகை ஊசி மாதா கோவில் எனப்படும் லூர்து மாதா பேராலயம், மாதரசி மாதா பேராலயம், காடம்பாடி புனித சவேரியார் கோவில் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த பவனியில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி, கீர்த்தனைகள் பாடியவாறு பவனி வந்தனர்.
Tags:    

Similar News