ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தவக்காலம்

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நாளை மறுநாள் தொடங்குகிறது

Published On 2022-02-28 05:19 GMT   |   Update On 2022-02-28 08:44 GMT
தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து நோன்பு கடைப்பிடித்து எளிமையான வாழ்க்கையை கடைப்பிடிப்பார்கள்.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்துவார்கள்.

இந்த தவக்காலத்தின் தொடக்க நாள் ‘சாம்பல் புதன்’ என அழைக்கப்படுகிறது. அன்றைய நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் அருட்பணியாளர்கள் பங்கு மக்களின் நெற்றியில் சிலுவை அடையாளம் பூசுவார்கள். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படும்.

இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 17-ந் தேதி வருகிறது. இதையொட்டி தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் நாளை மறுநாள் (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் கோட்டார் சவேரியார் ஆலயம், திரித்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு நடைபெறும்.

இதுபோல் சி.எஸ்.ஐ., ரட்சணிய சேனை, லுத்தரன் மிஷன் உள்ளிட்ட ஆலயங்களிலும் புதன்கிழமை சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து வருகிற தவக்கால நாட்களில் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு போன்றவை நடத்தப்படும்.

தவக்கால நாட்களில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து நோன்பு கடைப்பிடித்து எளிமையான வாழ்க்கையை கடைப்பிடிப்பார்கள்.
Tags:    

Similar News