ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தூய பவுல்

மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை அசன விழா இன்று நடக்கிறது

Published On 2022-02-17 09:34 IST   |   Update On 2022-02-17 09:34:00 IST
மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை அசன விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி, நற்செய்தி கூட்டங்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய 175-வது பிரதிஷ்டை மற்றும் அசன விழா கடந்த 8-ந்தேதி ஐ.எம்.எஸ். கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சி, நற்செய்தி கூட்டங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து 12-ந்தேதி மாலை 3 மணிக்கு திடப்படுத்தல் ஆராதனையும், மாலை 7.30 மணிக்கு பொதுமகமை சங்கத்தாரின் அமலிபால் வழங்கும் கிறிஸ்தவ இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 13, 14-ந் தேதிகளில் மாலை 7.30 மணிக்கு பாகவதர் கிளமெண்ட் வேதநாயகம் சாஸ்திரியாரின் பஜனை பிரசங்கம் நடைபெற்றது.

இதையடுத்து 15-ந் தேதி இரவு 7.30 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. நேற்று தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகையும், காலை 9 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கணம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனையும், காலை 11 மணிக்கு அசன வைபவ மங்கள கால் நடுதல், மாலை 4 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும், மாலை 7 மணிக்கு ஆயத்தப் பண்டிகை ஆராதனையும், இரவு 8 மணிக்கு 175-வது ஆண்டு சிறப்பு மலர் வெளியிடுதல் நடைபெற்றது. கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா ஆயத்த ஆராதனையையும், 175-வது சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

இன்று (வியாழக்கிழமை) காலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது. ஆராதனையை திருநெல்வேலி திருமண்டல முன்னாள் பேராயர் கிறிஸ்துதாஸ் அருளுரை வழங்குகிறார். காலை 6 மணிக்கு கணம் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், 6.15 மணிக்கு உலை ஏற்றும் வைபவம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு அசன வைபவம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கையும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொது மகமை சங்கம் சார்பில் தலைவர் ஜெயபோஸ், உப தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி இராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ், மற்றும் சபை மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News