ஆன்மிகம்
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயத்தில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

9-ம் நாள் திருவிழா: புனித சவேரியார் பேராலய தேர்பவனி

Published On 2019-12-03 05:21 GMT   |   Update On 2019-12-03 05:21 GMT
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 9-ம் நாள் திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கோட்டார் புனித சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இங்கு 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. 8-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது.

9-ம் நாள் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை, நற்கருணை ஆசிர் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு தேர்பவனி புறப்பட்டது.

பங்குதந்தை கிரேஸ் குணபால் ஆராச்சி தேரை மந்திரித்தார். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க இசை வாத்தியங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டது. முன்னதாக காவல் சம்மனசு, செபஸ்தியார் மற்றும் சவேரியார் ஆகிய சொரூபங்கள் தாங்கிய தேர்கள் வந்தன. அதன்பின் மாதா சொரூபத்தை தாங்கிய தேர் வந்தது.

ஒன்றன் பின் ஒன்றாக வந்த தேர்களில் நல்ல மிளகு, மெழுகுவர்த்தி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக வைத்து வழிபட்டனர். மலர் மாலைகளும் காணிக்கையாக அளிக்கப்பட்டது. தேருக்கு பின்னால் பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றியபடி சென்றனர்.

பேராலய திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு சவேரியார் பெருவிழா திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மறையுரையாற்றுகிறார். 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்பவனியும் நடைபெற உள்ளது.

பின்னர் இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. விழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் இறுதி நாளான இன்று உள்ளூர், வெளி ஊர்களில் இருந்து ஏராளமானோர் ஆலயத்துக்கு வருகை தருவார்கள்.
Tags:    

Similar News