ஆன்மிகம்
கோட்டார் சவேரியார் பேராலயத்தில் தேர் பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் தேர்பவனி

Published On 2019-12-02 03:29 GMT   |   Update On 2019-12-02 03:29 GMT
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கோட்டார் புனித சவேரியார் பேராலயம் திகழ்கிறது. இங்கு 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. 8-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலி நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.

பின்னர் இரவு 10.30 மணிக்கு தேர்பவனி தொடங்கியது. பங்குதந்தை கிரேஷ் குணபால் ஆராச்சி தேரை மந்திரித்தார். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க இசை வாத்தியங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டது. பெரிய தேர் புறப்படுவதற்கு முன் காவல் சம்மனசு, செபஸ்தியார் ஆகிய சொரூபங்கள் தாங்கிய தேர்கள் வந்தன. அதன்பின் புனித சவேரியார் சொரூபத்தை தாங்கிய தேர் வந்தது.



ஒன்றன் பின் ஒன்றாக வந்த தேர்களில் நல்ல மிளகு, மொழுகுவர்த்தி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக வைத்து வழிபட்டனர். மலர் மாலைகளும் காணிக்கையாக அளிக்கப்பட்டது. சவேரியார் தேருக்கு பின்னால் பக்தர்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றியபடி சென்றனர்.

அதாவது ஏராளமான சிறுவர், சிறுமிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் தரையில் சாஸ்டாங்கமாக விழுந்தும், பின்னர் எழுந்தும் வழிபட்டனர். ஆண்கள் தரையில் உருண்டும் நேர்சை செய்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடிவீஸ்வரம், கம்பளம் சந்திப்பு, ரெயில்வே ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

பேராலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. இதையொட்டி நாளை குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாரில் நேற்று இரவு முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளையும் நடைமுறையில் இருக்கும்.
Tags:    

Similar News