ஆன்மிகம்
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கொடியேற்றம்

Published On 2018-08-07 03:20 GMT   |   Update On 2018-08-07 03:20 GMT
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் விண்ணேற்பு திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மறைமாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. முன்னதாக நற்கருணை ஆலய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

6-ம் திருநாளான 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு நடக்கிறது. 7-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது. 9-ம் திருநாளான 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

10-ம் திருநாளான 15-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் தேரடி திருப்பலி நடக்கிறது.

தொடர்ந்து அன்னையின் தேர் பவனி நடைபெறும். பின்னர் காலை முதல் மாலை வரையிலும் தொடர் திருப்பலிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது. 
Tags:    

Similar News