ஆன்மிகம்
ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர் பவனி

Published On 2017-06-22 08:11 IST   |   Update On 2017-06-22 08:12:00 IST
நெய்வேலி அருகே ரோமாபுரியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி அருகே உள்ள ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஆலய பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் ஆலயத்தை சுற்றி சிறிய தேர் பவனியும் நடைபெற்றது. விழாவில் 19-ந்தேதி மாலை நவநாள் திருப்பலி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, மாலை 6 மணிக்கு தேனிமலை பங்குதந்தை லாசர் சவரிமுத்து, கூனங்குறிச்சி பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு, ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடலூர் மெயின்ரோடு வழியாக நெய்வேலி மேம்பாலம் வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் நெய்வேலி, விருத்தாசலம், வடலூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News