ஆன்மிகம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஏசுவின் சிலையை பேராலய அதிபர் பிரபாகர் வணங்கிய போது எடுத்த படம்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2017-04-15 06:00 GMT   |   Update On 2017-04-15 06:00 GMT
வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஏசுகிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நேற்று புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றன.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியையொட்டி நேற்று மாலை பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலை வைக்கப்பட்டு இருந்தது.


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

கலையரங்கத்தில் இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுக்கள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்குதந்தைகள் சிலுவையில் உள்ள ஏசுவின் பாதத்தில் முத்தமிட்டனர். பின்னர் ஏசுவின் சிலை பேராலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது பேராலயத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஏசு சிலையின் பாதத்தில் முத்தமிட்டனர்.

பின்னர் ஏசுவின் சிலை சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக எடுத்துச்செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேராலய பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருட்சகோதரர்கள், அருள்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News