ஆன்மிகம்

கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி 13-ந்தேதி நடக்கிறது

Published On 2017-04-11 10:35 IST   |   Update On 2017-04-11 10:35:00 IST
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி 13-ந்தேதி நடக்கிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 16-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் குருத்தோலை திருநாள் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஈஸ்டர் பண்டிகை வரை புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த புனித வாரத்தில் பெரிய வியாழன் முக்கிய நாளாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முந்தைய தினம் தன்னுடைய 12 சீடர்களுடன் பாஸ்கா விருந்து (கடைசி இரவு உணவு) உண்டார். அப்போது, அவர் ஒரு துண்டை எடுத்து தனது இடுப்பில் கட்டிக்கொண்டு 12 சீடர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவினார்.


அப்போது, அவர் ‘நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்’ என்று தனது சீடர்களிடம் கூறினார். அதன் நினைவாக வருகிற 13-ந் தேதி பெரிய வியாழன் அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயர்கள், பங்கு அருட்பணியாளர்கள் இயேசுவின் சீடர்களை குறிக்கும் வகையில் 12 பேர்களின் பாதங்களை கழுவுகிறார்கள்.

பின்னர், ஆலயங்களில் நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடைபெறும். பெரிய வியாழன் அன்று மாலை நடைபெறும் திருப்பலியில் ‘உன்னதங்களிலே’ என்ற பாடல் பாடப்படும் போது ஆலய மணிகள் ஒலிக்கப்படும். அதன்பிறகு ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி வரை ஆலய மணிகளோ, இசைக்கருவிகளோ ஒலிக்காது. மீண்டும் இயேசுவின் உயிர்ப்பின் போதுதான் அவை ஒலிக்கும்.

Similar News