ஆன்மிகம்

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 9-ந்தேதி நடக்கிறது

Published On 2017-04-06 05:24 GMT   |   Update On 2017-04-06 05:24 GMT
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 16-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி குருத்தோலை பவனி நடக்கிறது.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 16-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை ஒரு கழுதைக்குட்டியின் மேல் அமர்த்தி எருசலேம் நகரின் வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

அப்போது, வழியோரம் நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி, ‘தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’ என்று பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் வருகிற 9-ந் தேதி குருத்தோலை திருநாளாக கொண்டாடுகிறார்கள். இந்த திருநாள் ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அந்த நாள் ‘குருத்தோலை ஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது.



அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகள் வழங்கப்படும். அவற்றை கிறிஸ்தவர்கள் கைகளில் ஏந்தியபடி அந்தந்த ஊர்களில் தெருக்களின் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். அதை தொடர்ந்து திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை, முந்தைய நாள் மக்கள் நேர்ச்சையாகவும், காணிக்கையாகவும் ஆலயங்களுக்கு வழங்குவார்கள். அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் வருகிற 9-ந் தேதி குருத்தோலை பவனி நடக்கிறது. அதைத்தொடர்ந்து, ஈஸ்டர் வரை உள்ள நாட்கள் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Similar News