ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: துன்பங்களை சகித்து கொண்ட இயேசு

Published On 2017-03-24 10:26 IST   |   Update On 2017-03-24 10:26:00 IST
இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட, “தந்தையே, இவர்களை மன்னியும், இவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் செய்கிறார்கள்“ என்று சகித்து கொண்டு அவர்களுக்காக தம் தந்தையிடம் பரிந்து பேசுகின்றார்.
கடவுள், மனிதனை படைத்த போது, அருள் நிறைந்த நிலையில் உருவாக்கினார். பாவம் இழைத்த மனிதத்தை புறம் தள்ளி நித்தியசாபம் அவர் கொடுக்கவில்லை. மாறாக, அன்பின் ஊற்றாகிய அவர் இரக்கம் நிறைந்து மனிதனின் குற்ற உணர்வை சகித்துக்கொண்டார். ஆதிப்பெற்றோர் பாவத்தை சகித்ததன் விளைவாக தனது திருமகனையே மீட்பராக அனுப்பும் அளவிற்கு சகித்துக்கொண்டார்.

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ராயேல் மக்களை மீட்டு காணான் தேசத்திற்கு அழைத்துவர பாலைவனத்தில் 40 ஆண்டுகள் அவர்களோடு இருந்து பயணித்த இறைவன் அந்த மக்களின் மறத்த இதயத்தையும், வணங்கா கழுத்தையும் சகித்து ஏற்றார். விடுதலை பயணத்தின் தலைவரான மோசே பல சமயங்களில் ஆண்டவரிடம் மக்களின் மனநிலையை பற்றி முறையிட்டார்.

ஆனால் ஆண்டவர், பாலை நிலத்தில் மக்களின் தேவைகளான உண்ண உணவு, குடிக்க தண்ணீர், மனதிற்கேற்ற மாமிசம் ஆகியவற்றை கொடுத்தார். இருப்பினும் மக்கள் முணுமுணுத்தனர். ஆண்டவரிடம் மோசே அந்த முணுமுணுத்தலை சொல்லும் போது, ஆண்டவர் மோசே, உனக்கு எதிராக மக்கள் முணுமுணுக்கவில்லை. எனக்கு எதிராக செய்கிறார்கள். ஆகவே, கவலை கொள்ளாதே என்றார்.

இயேசுவின் காலத்தில் எருசலேமை நோக்கி அழுது புலம்பினார். (லூக் 13:34) “பேதுரு இயேசுவிடம் சகோதரன் ஒருவனை ஏழு முறை மன்னிக்கலாமா? என்று கேட்க, அவர் பல முறை மன்னிக்க வேண்டும், மன்னிப்பதில் எண்ணிக்கையில்லை“ என்றார். சகிப்பு தன்மை இருந்தால் தான் மனதிற்கு இளகிய நிலை என்பது சாத்தியமாகும்.

இயேசு தனக்கு ஏற்பட்ட அனைத்து துன்பங்களையும் சகித்து கொண்டார். சிலுவையில் தொங்கும் போது கூட, “தந்தையே, இவர்களை மன்னியும், இவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் செய்கிறார்கள்“ என்று சகித்து கொண்டு அவர்களுக்காக தம் தந்தையிடம் பரிந்து பேசுகின்றார். நாமும் பலவீனப்பட்டவர்கள். நாம் ஒருவரை ஒருவர் ஏற்று, சகித்து கொண்டு வாழ்ந்தால் இந்த தவக்காலம் சகிப்பின் காலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அருட்திரு பீட்டர்ராஜ், பங்குத்தந்தை, தவசிமடை.

Similar News