ஆன்மிகம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கொடி இறக்கும் நிகழ்ச்சி

Published On 2016-09-09 08:40 IST   |   Update On 2016-09-09 08:40:00 IST
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஆரோக்கிய மாதா பிறந்தநாளான நேற்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் இத்திருவிழா நிறைவுபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News