ஆன்மிகம்

தூயதேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-08-09 10:04 IST   |   Update On 2016-08-09 10:04:00 IST
காரைக்காலில் உள்ள தூயதேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மும்மத வழிபாட்டுத் தலங்களுள் தூயதேற்றரவு அன்னை ஆலயமும் ஒன்று. காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை பிரெஞ்சுக் காரர்கள் ஆட்சி செய்தபோது சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாதா கொடி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிய கிறிஸ்தவக் கல்வி பிரிவு தலைவர் ஜோனாஸ் அடிகளார் கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆலய பங்குத்தந்தை அந்தோணி லூர்துராஜ், தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ் மற்றும் துணை பங்கு குருக்கள், அருட்சகோதரிகள் உள்பட திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபவழிபாடு மற்றும் சிறியதேர் பவனியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மின் அலங்கார பெரிய தேர் பவனியும் நடைபெறுகிறது. மறுநாள் (16-ந்தேதி) காலை 6.30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

Similar News