ஆன்மிகம்

நலம் தரும் புனித அந்தோணியார் திருத்தலம்

Published On 2016-05-05 08:13 IST   |   Update On 2016-05-05 08:13:00 IST
புனித அந்தோணியார் திருத்தலம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய இந்த திருத்தலம் கடந்த 41 ஆண்டுகளாக சுற்றுப்புறம் மற்றும் தொலைதூர பக்தர்களையும் ஈர்க்கும் ஆலயமாக புகழ்பெற்று விளங்குகிறது.
புனித அந்தோணியார் திருத்தலம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய இந்த திருத்தலம் கடந்த 41 ஆண்டுகளாக சுற்றுப்புறம் மற்றும் தொலைதூர பக்தர்களையும் ஈர்க்கும் ஆலயமாக புகழ்பெற்று விளங்குகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜான்சன் என்ற மாவட்ட ஆட்சியர் அவர்களால் குமாரசாமிப்பட்டியில் வாழ்ந்த மக்களுக்கு இந்த இடம் ஒதுக்கப்பட்டது. இங்கு குடியிருந்த 7 கிறிஸ்தவ குடும்பங்களுக்காக ஆலயம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மரியசூசை மகன் துரைசாமிபிள்ளை அவர்களால் கொண்டு வரப்பட்ட கோடி அற்புதங்கள் செய்யும் புனித அந்தோணியாரின் சுரூபத்தை கூரை கொட்டகை அமைத்து அதில் மக்கள் கூடி ஜெபித்து வந்தனர். 1933-ம் ஆண்டு முதல் ஜான்சன்நகர், செவ்வை நகர் பங்கின் துணை பங்காக செயல்பட்டு வந்தது.

காலத்தின் தேவைக்கு ஏற்ப ஒரு சிறிய கோவில் அருட்திரு உர்மான்ட் அவர்களால் கட்டப்பட்டு ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

1953 அரிசிப்பாளையம் தனிப்பங்காக செவ்வாய் நகரிலிருந்து பிரிக்கப்பட்ட போது ஜான்சன்நகர் அதன் துணைப்பங்காக மாறியது. 1954-ல் மக்களின் ஆன்மிக தேவைக்காக அருட்தந்தை எஸ்.சி.செபாஸ்டின் பங்கு தந்தையாக நியமிக்கப்பட்டார். 12-6-1972-ல் புதிய ஆலயம் அமைக்க மேதகு செல்வநாதர் ஆயர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 19-3-1975 அன்று அப்போதைய ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் புதிய ஆலயம் புனிதப்படுத்தப்பட்டு தனிப்பங்காக உருவாக்கப்பட்டு அருட்திரு பால்அந்தோணி முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

1-6-2000-ல், 25-ம் ஆண்டு நினைவாக புனித அந்தோணியார் குருசடி அருட்திரு ஜெகநாதன் பங்கு தந்தை அவர்களால் கட்டப்பட்டது. 2005-ல் ஆலயத்தின் உட்புறம் அருட்திரு மதலைமுத்து அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. பின்பு பங்கு குருவாக பொறுப்பேற்ற அருட்திரு ஜேக்கப் அடிகள் புதிய கோபுரமும், மணிகூண்டும் அமைத்து, பிரமாண்டமான உலக இரட்சகர் சுரூபவமும் நிறுவப்பட்டு 22-5-2007 அன்று மேதகு ஆயர் சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தற்போதைய பங்குதந்தையும் சேலம் மறைமாவட்ட முதன்மை குருவுமான அருட்தந்தை பெலவேந்திரம் அடிகள் அவர்களின் வெகு முயற்சியால் ஆலயத்தை விரிவுப்படுத்த வேண்டி 22-1-2014-ல் மேதகு ஆயர் சிங்கராயன் அவர்களால் ஆலய விரிவாக்கப்பணி ஆரம்பமானது. பங்குதந்தை பெலவேந்திரம் உதவி பங்குதந்தை அருட்திரு பவுல்ராஜ், பங்கு பேரவை, அன்பிய வழிகாட்டிகள் மற்றும் அந்தோணியார் பக்தர்கள் மூலம் பணிகள் தீவிரமாக விரைவுப்படுத்தப்பட்டு இத்திருத்தலம் மேதகு ஆயர் சிங்கராயன் மற்றும் மேதகு ஆயர் அந்தோணி சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

Similar News