ஆன்மிகம்
தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ்பயஸ் கொடியேற்றி வைத்த போது எடுத்த படம்.

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-08-31 12:10 IST   |   Update On 2017-08-31 12:10:00 IST
தென்னகத்து வேளாங் கண்ணி என்று போற்றப்படும் புகழ் வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்னகத்து வேளாங் கண்ணி என்று போற்றப்படும் புகழ் வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் மாலை 6.25 மணிக்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் அன்னையின்கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். காலை முதல் மாலை வரை திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கார், வேன், பஸ்களில் வந்திருந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை சபை 142-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்றான இயேசுவின் அருமருந்து 17-வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.

தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப் பெரும் விழாகூட்டுத்திருப்பலியும் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி அவர்களால் நடத்தப்படுகிறது. இரவு 7 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடக்கிறது.

மறுநாள் 9- ந்தேதி காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பாதிரியார் ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல நிர்வாகி ஜோசப் அடிகளார், பாதிரியார்கள் ஆரோக்கியதாஸ், அமலநாதன் அடிகளார், ஆன்மீக குரு அகஸ்டின்காரமல் அடிகளார் உள்பட இருபால் துறவியர்கள், பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Similar News