ஆன்மிகம்
காவல்கிணறு புனித உபகார மாதா ஆலய தேர்பவனி நடந்தபோது எடுத்த படம்.

புனித உபகார மாதா ஆலய தேர்பவனி: திரளானவர்கள் கலந்து கொண்டனர்

Published On 2017-05-26 09:38 IST   |   Update On 2017-05-26 09:39:00 IST
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு புனித உபகார மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறில் புனித உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு மறையுரை, திருப்பலியும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடந்தது.

8-ம் திருவிழாவான 22-ந் தேதி அன்று காலை திருப்பலியில் சிறுவர்- சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு நற்கருணை பவனி நடந்தது.

9-ம் திருவிழாவான 23-ந்தேதி காலை 5 மணிக்கு திருயாத்திரை மற்றும் திருப்பலி நடந்தது. இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்பவனியும் நடந்தது.

10-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா பாடல் திருப்பலியும், உறுதி பூசுதல் அருள்விழாவும் நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு, மாதாவை வழிபட்டனர். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடந்தது.

விழா ஏற்பாடுகளை பங்கு குரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகளும், பங்குமக்களும் செய்து இருந்தனர்.

Similar News