ஆன்மிகம்

காவல்கிணறு தூய உபகார மாதா ஆலய திருவிழா 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2017-05-12 03:07 GMT   |   Update On 2017-05-12 03:07 GMT
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தூய உபகார மாதா ஆலய திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தூய உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மணப்பாடு பங்குதந்தை தியோபிலஸ் அடிகள் தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு திருயாத்திரை மற்றும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவு 10 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

8-ம் திருவிழாவான 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு நற்கருணை பவனி நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவான 23-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில், உபகார அன்னையின் பெருவிழா ஆடம்பர மாலை ஆராதனை நடக்கிறது.

தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 10-ம் திருவிழாவான 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல், திருப்பலி மற்றும் உறுதி பூசுதல் அருள் விழாவும் நடக்கிறது.

மாலை 3 மணிக்கு தேர்பவனியும், 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவு 10 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 25-ந் தேதி மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்குகுரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் சபை மக்கள் உள்பட பலர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News