ஆன்மிகம்

ஆலம்பாக்கத்தில் புனித தோமையார் ஆலய தேர் பவனி

Published On 2017-05-09 10:22 IST   |   Update On 2017-05-09 10:22:00 IST
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கத்தில் புனித தோமையார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனித தோமையார் சொரூபம் தாங்கிய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து தினமும் மாலையில் அருள் தந்தையர்கள் தலைமையில் கூட்டுப்பாடல் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. நேற்று மாலை முக்கிய நிகழ்வான புனித தோமையார் சொரூபம் தாங்கிய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபர் தங்கசாமி தொடங்கி வைத்தார்.

இதில் வாணதிரையான்பாளையம், புதூர்பாளையம், திருவள்ளுவர்நகர், கோவண்டாகுறிச்சி, வடுகர்பேட்டை, விரகாலூர், நத்தம், புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் நற்கருணை ஆசிர்வாதம் நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் கொடியிறக்கம் மற்றும் அன்னதானம் நடைபெறும்.

திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்தந்தை பர்னபாஸ், அருட்சகோதரிகள், கிராம பட்டையதாரர்கள், புனித தோமையார் அந்தோணியார் பேரவையினர் செய்திருந்தனர்.

Similar News