ஆன்மிகம்

பத்துகாணி குருசுமலை திருப்பயண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-03-27 11:21 IST   |   Update On 2017-03-27 11:21:00 IST
பத்துகாணி குருசுமலையில் திருப்பயண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பத்துகாணி குருசுமலையில் திருப்பயண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 2-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. நேற்று நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் இன்சென்ட் சாமுவேல் கொடியேற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். குருசுமலையில் குருசு ஸ்தாபித்து 60 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த ஆண்டு வைரவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இதற்கான கூட்டு திருப்பலி திருவனந்தபுரம் மறை மாவட்ட ஆயர் சூசைபாக்கியம் தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்துக்கு ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கினார். இதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அறநிலைய துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

30-ந்தேதி மாலை கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருப்பலியும், 31-ந்தேதி ரத்தசாட்சி திருப்பலி, பரிகார சிலுவை பாதை, ஜெபவழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.

ஏப்ரல் 1-ந்தேதி காலையில் கடையாலுமூடு பங்குதந்தை சூசைராஜ் தலைமையில் திருப்பலியும், ஜெபமாலை பவனி, சிலுவை பாதை நிகழ்ச்சிகள், 2-ந்தேதி காலை 9 மணிக்கு வின்சென்ட் சாமுவேல் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியும், பகல் 3 மணிக்கு திருவனந்தபுரம் மறை மாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து கொடி இறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.

Similar News