ஆன்மிகம்
புனித அருளானந்தரின் தேர் பவனியில் திரளானவர்கள் கலந்து கொண்ட போது எடுத்த படம்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் புனித அருளானந்தர் ஆலய தேர் திருவிழா

Published On 2017-02-06 11:08 IST   |   Update On 2017-02-06 11:08:00 IST
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புனித அருளானந்தர் ஆலய தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

தினமும் ஜெபமாலை, சிறப்பு நவநாள், திருப்பலி, மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு அருட்பணி ஆரோக்கியசாமி தலைமையில் ஆங்கிலத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு கூட்டுபாடற்பலி மேட்டுப்பாளையம் மறைமாவட்ட முதன்மை குரு ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

இரவு 7 மணியளவில் ஆடம்பர தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி புனித அருளானந்தரின் சொரூபம் அலங்கார தேரில் வைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது. கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்தவர்கள் புனித அருளானந்தரை தரிசித்தனர். பின்னர் பங்கு தந்தை விக்டர், உதவி பங்கு தந்தை ஜெரால்டு, பெலிக்ஸ் ஆகியோர் புனித அருளானந்தரின் தேருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் தேர் வெங்கடசாமி ரோடு, கவுலிபிரவுன் ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அதன்பின்னர் நற்கருணை ஆசிர் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News