ஆன்மிகம்

திறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்

Published On 2016-07-04 12:06 IST   |   Update On 2016-07-04 12:06:00 IST
ஆண்டவர் ஞானிகளையும், திறமைசாலிகளையும், பணக்காரர்களையுமே தனது பணிக்காக தேர்ந்தெடுப்பார்.
ஆண்டவர் ஞானிகளையும், திறமைசாலிகளையும், பணக்காரர்களையுமே தனது பணிக்காக தேர்ந்தெடுப்பார். அவர்களையே நேசிப்பார் என்ற தப்புக்கணக்கு பலரிடமும் இருக்கிறது. அப்படி அவர் நினைத்திருப்பாரேயானால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று சிந்தியுங்கள்.

* கர்த்தர் மோசேயைத் தெரிந்து கொண்ட போது, மோசே தன்னுடைய இயலாமையை ஆண்டவரிடத்தில் விவரித்து, ""நான் வாக்குவல்லவன் அல்ல. நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்,'' என்றார். ஆனால், கர்த்தர் மோசேயைக் கொண்டு முழு இஸ்ரவேல் ஜனங்களையும் நாற்பது ஆண்டுகள் வழிநடத்த வல்லவராய் இருந்தார்.

* கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியை அழைத்த போது, எரேமியா தன்னைத் தாழ்த்தி சொன்னது என்ன தெரியுமா? ஆ...கர்த்தராகிய ஆண்டவரே! இதோ! நான் பேச அறியேன். சிறுபிள்ளையாய் இருக்கிறேன்,'' என்றார். எனினும், கர்த்தர் தம் வார்த்தைகளை எரேமியாவின் வாயில் தந்து, தீர்க்கதரிசியாக்கி வல்லமையாகப் பயன்படுத்தினார்.

* கர்த்தர் பேதுருவை அழைத்தபோது மீன் பிடித்துக் கொண்டு இருந்தார். படிப்பறிவு இல்லாத பேதுரு, ""ஆண்டவரே! நான் பாவியான மனுஷன் என்னை விட்டுப் போய்விடும்,'' என்றார். ஆனால், கர்த்தரோ பேதுருவை சீஷனாக்கி, ஆவிக்குரிய வரங்களைத் தந்து மாபெரும் அப்போஸ்தலக்கினார்.

* மெதடிஸ்ட் ஆலயங்களை எல்லாம் நிறுவின ஜான்வெஸ்லி குள்ளமாய் இருந்தார். மற்றவர்களால் கேலி செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும், கர்த்தரோ அவரை அக்னி ஜுவாலையாய் வல்லமையாய் பயன்படுத்தினார்.

* போதகர் டி.எல்.மூடி படிப்பறிவு இல்லாதவர். அவர் பேசும் ஆங்கிலத்தை அநேகர் கேலி செய்வதுண்டு. என்றாலும், அவருடைய ஊழியத்தினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கான பேர். இன்றைக்கும் கிறிஸ்தவ சரித்திரத்தில் அவருக்கு நீங்காத இடமுண்டு.

* கொரியாவின் பால்யாங்கிசோ, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர். சயரோகத்தினால் பாதிக்கப்பட்டு ஒடுங்கிப்போய் இருந்தார். இருமி இருமி இளைத்து துரும்பானார். ஆனால், கர்த்தர் அவரை உயர்த்தி தெய்வீக மனுஷனாய் ஆசிர்வதித்தார்.

எனவே, தேவகுழந்தைகளான நாம், சாதாரண நிலையில் இருக்கிறோமே என வருந்தத் தேவையில்லை. கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக் கொடுத்து விட்டால், அவர் நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வார். நம்மைக் கனத்துக்குரிய பாத்திரமாக மாற்றுவார்.

Similar News