ஆன்மிகம்

புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா திருப்பலி

Published On 2016-06-14 09:30 IST   |   Update On 2016-06-14 09:30:00 IST
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்த ஆண்டு பெருவிழா திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் பழமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு நடைபெற்று வந்தது.

மேலும் புனித அந்தோணியாரின் சொரூபம் தாங்கி பொருத்தனை தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை 8 மணிக்கு புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஆண்டு பெருவிழா திருப்பலி நடந்தது.

தொடர்ந்து பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் இறையாசி வழங்கினார். இதில் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல், நாகர்கோவில், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, புதுச்சேரி ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய அதிபர் பால்ராஜ் தலைமையில் காரியக்காரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News