ஆன்மிகம்

புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று ஆடம்பர தேர்பவனி

Published On 2016-06-13 10:40 IST   |   Update On 2016-06-13 10:40:00 IST
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் நூற்றாண்டு விழா கண்ட புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, ஜெப வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 8 மணிக்கு புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற உள்ளது.

தொடர்ந்து இரவு 10 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வழிபடுவதற்காக உள்ளூர் பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மேல்நாரியப்பனூர் கிராமத்திற்கு திரண்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ் வசதிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய அதிபரும், பங்கு தந்தையுமான பால்ராஜ் சிறப்பாக செய்து வருகிறார்.

Similar News