ஆன்மிகம்

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-05-07 10:49 IST   |   Update On 2016-05-07 10:49:00 IST
உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணிக்கு புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரியின் செயலர் பால் தலைமையில் சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது.

விழாவையொட்டி தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், மறையுரையும் தொடர்ந்து தேர்பவனியும் நடைபெற உள்ளது.

வருகிற 14-ந் தேதி இரவு பெரிய தேர்பவனி நடைபெறும். 15-ந் தேதி காலை 6.30 மணிக்கு புதுவை-கடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. மாலை ஆடம்பர தேர்பவனி நடைபெற உள்ளது. 16-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை மற்றும் பங்குபேரவையினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Similar News