கிரிக்கெட்

ரோகித் சர்மா

பாகிஸ்தான் தோல்வி எதிரொலி - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா செல்லும் வாய்ப்பு அதிகரிப்பு

Published On 2022-12-06 22:58 GMT   |   Update On 2022-12-06 22:58 GMT
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
  • இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

மும்பை:

டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வத்தை ரசிகர்களிடயே அதிகரிக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டது.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இதில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.

தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.

பாகிஸ்தான் அணி தற்போது தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருந்தது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதன்பின் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கூட இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இது பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சாதகமாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News