ஷிவம் மாவி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார்- ஹர்திக் பாண்ட்யா புகழாரம்
- ஐ.பி.எல். போட்டியில் ஷிவம் மாவி சிறப்பாக பந்து வீசுவதை பார்த்து இருக்கிறேன்.
- நான் அவருக்கு ஆதரவாக இருந்து வாய்ப்பு கொடுத்தேன்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றி முக்கிய பங்கு வகித்த ஷிவம் மாவியை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பாராட்டி உள்ளார்.
இது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
இந்த போட்டியில் நாங்கள் தோற்று விடும் நிலை உருவானது. கடைசி ஓவரை அக்ஷர் படேல் அபாரமாக வீசினார். நாங்கள் பலமுறை விவாதிக்கும் நிலை ஏற்பட்டது. ஐ.பி.எல். போட்டியில் ஷிவம் மாவி சிறப்பாக பந்து வீசுவதை பார்த்து இருக்கிறேன். நான் அவருக்கு ஆதரவாக இருந்து வாய்ப்பு கொடுத்தேன். மாவியும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பாக பந்து வீசினார். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தோல்வி குறித்து இலங்கை கேப்டன் தசுன் ஷனகா கூறும் போது, 'ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இயலாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டிய போட்டி யாகும். 163 ரன் இலக்கு எடுக்க கூடியது. நாங்கள் அடுத்த ஆட்டத்தில் பதிலடி கொடுப்போம்' என்றார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஆட்டம் புனேயில் நாளை நடக்கிறது.
இதனால் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.