மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி, 3 டெஸ்டில் விளையாட இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்கா பயணம்
- 20 ஓவர் அணி மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செல்வார்கள்.
- டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் காலதாமதமாக அணியுடன் இணைந்து கொள்வார்கள்.
பெங்களூரு:
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் ஆட்டம், 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
20 ஓவர் தொடர் வருகிற 10-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் 17 முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ந் தேதி செஞ்சுரியனிலும் 2-வது டெஸ்ட் ஜனவரி 3-ந் தேதி கேப்டவுனிலும் நடக்கிறது.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்க தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பெங்களூரில் இருந்து இன்று புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 ஓவர் அணி மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செல்வார்கள். டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் காலதாமதமாக அணியுடன் இணைந்து கொள்வார்கள்.
தென் ஆப்பிரிக்க தொடருக்கு 3 விதமான கேப்டன் நியமனமாகி உள்ளார். 20 ஓவர் போட்டிக்கு சூர்ய குமார் யாதவும், ஒருநாள் போட்டிக்கு லோகேஷ் ராகுலும், டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ரோகித்சர்மா பணியாற்றுவார்கள்.
சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.