ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அபார பந்து வீச்சு- 105 ரன்னுக்கு சுருண்டது இலங்கை
- இலங்கை வீரர்கள் 3 பேர் டக் அவுட்டானார்கள்.
- பானுகா ராஜபக்சே 38 ரன்கள் அடித்தார்.
துபாய்:
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இன்று தொடங்கியது. துபாயில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் களம் இறங்கி விளையாடியது.
ஆப்கானிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சால் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பானுகா ராஜபக்சே 38 ரன்கள் அடித்தார். சமிகா கருணாரத்னா 31 ரன்கள் எடுத்தார். இலங்கை வீரர்கள் சரித் அசலங்கா, தசுன் ஷனகா, மகிஷ் தீட்சனா ஆகியோர் டக் அவுட்டாகினர்.
இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்களை சாய்த்தார். முஜிபூர் ரஹ்மான், முகமது நபி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். நவீன் உல்கக் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 106 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது.