சினிமா
தியேட்டர்

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி

Published On 2021-01-04 12:24 IST   |   Update On 2021-01-04 16:41:00 IST
தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

இதே நிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த நிலையில், பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கும் இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News