சினிமா

சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் வழங்கினார் முதல்வர் பழனிசாமி

Published On 2018-12-11 09:22 GMT   |   Update On 2018-12-11 09:22 GMT
சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #TNCM #Edappadipalaniswami
சென்னை:

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, இந்த ஆண்டு 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்பிரிசியே‌ஷன் பவுன்டே‌ஷன் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2018-19ம் கல்வியாண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதலாமாண்டு முதுகலைத் தமிழ்ப் பயிலும் மாணவர்களுள் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு கல்வித் தொகையாக மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து, மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.


தமிழ் வளர்ச்சித் துறையின் 2018-19-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்க்குடிமகன், மேலாண்மை பொன்னுச்சாமி மற்றும் முனைவர் பொன். சௌரிராசன் ஆகிய தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு அதற்கான பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, முனைவர் மு. தமிழ்க்குடிமகன், மேலாண்மை பொன்னுச்சாமி மற்றும் முனைவர் பொன். சௌரிராசன் ஆகிய தமிழறிஞர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய்க்கான பரிவுத் தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் தமிழ்பிராமி எழுத்தில் அணியமாக்கப்பட்டுள்ள ‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்’ என்ற நூலினையும் வெளியிட்டார். #TNCM #Edappadipalaniswami
Tags:    

Similar News