சினிமா

பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்

Published On 2017-05-23 12:55 IST   |   Update On 2017-05-23 12:55:00 IST
பத்திரிகையாளர்களை அவமதித்ததாக கொடுக்கப்பட்ட வழக்கில் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது.

இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர். நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டன கூட்டம் நடத்தினர். அந்த கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக பேசினர்.



இதையடுத்து, பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூர்யா உள்ளிட்ட மேற்சொன்ன 8 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது உதகை குற்றவியல் நீதிமன்றம்.

Similar News