தரவரிசை
விமர்சனம்

மதுரை மணிக்குறவன் விமர்சனம்

Published On 2022-01-06 13:10 IST   |   Update On 2022-01-06 13:10:00 IST
ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவி லதா நடிப்பில் வெளியாகி இருக்கும் மதுரை மணிக்குறவன் படத்தின் விமர்சனம்.
மதுரையில் உள்ள மார்க்கெட்டில் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார் நாயகன் ஹரிக்குமார். அதேசமயம் அதிகம் வட்டிக்கு பணம் வாங்கும் வில்லன் காளையப்பனுடன் மோதல் ஏற்படுகிறது. அதேபோன்று அந்த ஊர் எம்.எல்.ஏ சுமனுடனும் சாராய வியாபாரி சரவணனுடனும் ஹரிக்குமாருக்கு மோதல் ஆகிறது.

இது ஒருபுறம் இருக்க ஹரிக்குமாருக்கும் அவரது மாமன் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், சுமனின் சூழ்ச்சியால் அத்திருமணம் நின்றுவிட, மாதவி லதாவை திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில் சுமன், சரவணன் மற்றும் காளையப்பன் மூவரும் சேர்ந்து ஹரிக்குமாரை கொலை செய்து விடுகின்றனர். 



அதன்பின் ஹரிக்குமாரை போன்றே உருவம் கொண்ட ஒருவர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் சேருகிறார். இதைக்கண்டு வில்லன்கள் அதிர்ச்சியடைகிறார்கள். இறுதியில் ஹரிக்குமார் இறந்தாரா? இன்ஸ்பெக்டராக வந்த நபர் யார்?  ஹரிக்குமாரை கொலை செய்தவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

நடன இயக்குனாரக இருந்து பிறகு நடிகராக வலம் வரும் ஹரிக்குமார், இப்படத்தில் இரு வேடங்களில் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் ஆக்‌ஷன் காட்சியில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகி மாதவி லதா நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். வில்லன்களாக நடித்திருக்கும் சுமன், சரவணன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் டில்லி கணேஷ் அவர்களுடைய பணியை சரியாக செய்துள்ளனர்.



இந்த படத்தை இயக்குனர் ராஜரிஷி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் தொடர்ந்து இடம்பெறும் கதைகளில் ஒன்றாக இருக்கிறது. பெரிதாக கதைக்கு முக்கியதுவம் கொடுக்காதது படத்தின் சரிவு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்தும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்பதே பார்வையாளர்களின் வருத்தமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.கே இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இளையராஜாவின் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மதுரை மணிக்குறவன்’ சம்பவம் சரியில்லை.

Similar News