தரவரிசை

மதுரா

null

விஜய் சேதுபதி எனக்கு ஆசான் - நடிகை மதுரா பேச்சு

Published On 2023-05-22 14:44 GMT   |   Update On 2023-05-23 04:47 GMT
  • இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
  • இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. விஜய் சேதுபதி நாயகனாக நடித்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில், லண்டனில் இருந்து கொடைக்கானலுக்கு தன் இசைக் குழுவுடன் வரும் "ஜெசி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றவர் மதுரா. தற்போது, ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்திருந்த சிறப்பு பேட்டியின் போது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தை பற்றி உங்களது கருத்து என்ன என்ற கேள்விக்கு, என் அம்மாவின் பூர்வீகம் இலங்கை, யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் கதையோ ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனையையும் சொல்லும் கதை என்பதால் என்னால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது, இந்தப் படம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவே நான் பார்க்கிறேன். கண்டிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் இது நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவும் அமையும் என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.



நடிகர் விஜய் சேதுபதி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்ட போது, தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. என் முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது என்னை பார்த்ததும் புரிந்துகொண்டு எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து பதட்டத்தை போக்கி எனக்கு ஒரு ஆசனாக இருந்தார். அவருடன் இந்தப் படத்தில் பயணிக்க வாய்ப்பு தந்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவேக் அவர்களைப் பற்றி உங்களின் கருத்து, நடிப்பின் மீது ஆர்வம் வந்த பிறகு அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அவருடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பேரானந்தம், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசியது பழகியது அனைத்தும் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது.

எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறிய இடைவேளை இருந்தது அப்போது பியானோ அங்கிருந்தது அதில் எனக்கு முதல்வன் படத்தில் இருந்து குறுக்கு சிறுத்தவளே என்ற பாடலை வாசிக்க கற்று கொடுத்தார், அதுமட்டுமல்ல நிறைய இளையராஜா பாடல்களை எங்களுக்கு வாசித்து காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அவரின் மறைவு எனக்கு மிகுந்த வேதனையை தந்தது, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரத்தை இழந்து விட்டோமே என்று.



மேகா ஆகாஷுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கேட்ட போது, என்னுடைய நடிப்பு பயணத்தில் முதல் நட்சத்திர நடிகையும் எனக்கு நல்ல தோழியும் ஆன மேகா ஆகாஷ் உடன் நடித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். எங்களது நட்பு என்றும் நீடிக்கும்.

சந்திரா ஆர்ட்ஸ் புரொடக்சன் பற்றியும் தயாரிப்பாளர் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஜெர்மனியில் இருந்து படப்பிடிப்புக்காக சென்னை வரும்போதெல்லாம் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அக்கரையாகவும் எனக்கு தேவையான வசதிகளையும் அனைத்தையும் ஒரு புதுமுக நடிகை என்று பார்க்காமல் தாய் வீட்டில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய சந்திரா ஆர்ட்ஸ் புரொடக்சனுக்கு மிக்க நன்றி.

இயக்குனரைப் பற்றியும் அவரது பணியை பற்றியும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டதற்கு, தமிழ் திரை உலகில் எத்தனையோ கதைகள் இருந்தாலும் தன் முதல் படத்தில் ஈழத் தமிழனின் கதையை ஆழமாகவும் நேர்த்தியாகவும் அழகாக வடிவமைத்து அதில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தந்ததற்கு என்னுடைய இயக்குனருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.


அவரைப் பற்றியும் அவரின் குடும்பத்தை பற்றியும் பகிர்ந்துகொண்ட அவர், நான் ஜெர்மனி நாட்டில் பெர்லின் மாநகரில் பிறந்தேன் என்னுடைய அப்பா ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்னுடைய தாயார் இலங்கையை யாழ்ப்பாண தமிழ் பெண், எனக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், நான் ஜெர்மன் நாட்டில் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்து பயிற்சிப்பட்டறையில் கடமை ஆற்றுகின்றேன். என்னுடைய சிறு வயதிலிருந்து தமிழ் மொழி அதை சார்ந்த கலைகளான பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் அனைத்தையும் கற்றுத் தெரிந்தேன் என் கல்லூரி நாட்களில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளும் வாங்கியுள்ளேன்.

தமிழ் மொழியில் உயர்தர கல்வியை முடித்து ஜெர்மன் பிராங்பேர்ட் நகரில் உள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியராகவும் தற்போது பணியாற்றுகிறேன். சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன், அது மட்டுமல்லாமல் ஜெர்மனில் மூன்று இசை வீடியோக்களில் நடித்துள்ளேன்

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திற்குள் எப்படி வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ஜெர்மனியில் நான் செய்த மாடலிங் வீடியோக்கள் மற்றும் நான் நடித்த மியூசிக் ஆல்பம் மூலமாக எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


கலைத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்து பேசிய அவர், சிறு வயதிலிருந்தே எனக்கு நடிப்பின் மீதும் நடனத்தின் மீதும் ஈடுபாடு அதிகம் நடிப்பில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு ஆசையாக மாறி அதற்காக அனைத்தையும் கற்றுக் கொண்டேன் அதற்காக கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டிருந்தேன், என்னுடைய ஆசைக்கும் கனவுக்கும் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் முக்கியமாக என்னுடைய பெற்றோருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழ் படத்தின் மீது உங்களுக்கு உண்டான புரிதல் பற்றிய கேள்விக்கு, தமிழ் எனக்கு பிறப்பிலிருந்து ஊட்டப்பட்டது, நான் ஒரு தமிழ் பெண், சிறு வயதில் இருந்தே தமிழ் பேசி வளர்ந்ததால் தமிழ் திரைப்படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன், ஆனால் தமிழில் நடிக்கப் போகிறோம் என்றவுடன் தமிழில் எல்லா நடிகர், நடிகைகள் உடைய படத்தை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். ரஜினி சார் உடைய மாஸ், கமல் சார் உடைய நடிப்பு, விஜய் சேதுபதி அவர்களுடைய இயல்பான நடிப்பு அனைத்தையும் பார்த்து ரசித்திருக்கிறேன். நான் தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. படத்திற்கும் எனக்கும் ஆதரவு கொடுத்த என் ரசிகர்களுக்கும், தமிழ் மக்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News