சினிமா
மலையாள நடிகர் திலீப்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல் - ஆலுவா சிறையில் அடைப்பு
கேரளாவில் நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் நடிகர் ஒருவருக்கு இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. விசாரணையின் அடிப்படையில் நடிகர் திலீப்பிடம் நேற்று காலை முதல் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் நடிகர் திலீப் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவர் மீது கடத்தல் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, அங்கமாலி நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் நடிகர் திலீப் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டார். தீலீப்பு எதிராக 19 ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்தனர். மேலும், கடத்தல் மற்றும் தாக்குதலுக்கு சுமார் ரூ.1.5 கோடி கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து ஆலுவா துணை சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் திலீப் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி இல்லம் முன்பாக ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர். கேரளாவில் பிரபலமான நடிகர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.