சினிமா செய்திகள்

அச்சுதானந்தன் மரணம் குறித்து சர்ச்சை பதிவு: ஜெயிலர் பட வில்லன் மீது டி.ஜி.பி.யிடம் புகார்

Published On 2025-07-25 07:36 IST   |   Update On 2025-07-25 07:36:00 IST
  • உம்மன்சாண்டியின் குடும்பத்தினர் வழக்குக்கு ஆதரவாக இல்லாததால் வழக்கு கைவிடப்பட்டது.
  • பல்வேறு தரப்பினரும் நடிகர் விநாயகனுக்கு எதிராக கடும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டனர்.

நடிகர் விநாயகன் மலையாளம், தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி வரும் இவர் பல்வேறு கட்டங்களில் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மண் சாண்டி மரணம் அடைந்த போது அவரது உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் விநாயகன், 'எனது தந்தையும் செத்தார், உம்மன் சாண்டியும் செத்தார்' என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு எதிராக கண்டன குரல் எழும்பியது. அத்துடன் அவருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.

ஆனால் உம்மன்சாண்டியின் குடும்பத்தினர் வழக்குக்கு ஆதரவாக இல்லாததால் அந்த வழக்கு கைவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ். அச்சுதானந்தன் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் எர்ணாகுளம் பஸ் நிலையம் அருகே இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் விநாயகன், 'இறக்கவில்லை... இறக்கவில்லை... எனது தலைவர் வி.எஸ் அச்சுதானந்தன் இறக்கவில்லை.... எங்களுடனேயே வாழ்கிறார்' என கையை உயர்த்திய படி ஆதரவு கோஷத்தை முழக்கினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், மரணம் அடைந்த உம்மன் சாண்டிக்கு எதிராக அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்தை முன் வைத்து பல்வேறு தரப்பினரும் நடிகர் விநாயகனுக்கு எதிராக கடும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டனர்.

இந்தநிலையில் நடிகர் விநாயகன் தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவிட்டு உள்ளார். அதில் 'எனது தந்தையும் செத்தார், வி.எஸ். அச்சுதானந்தனும் செத்தார், காந்தியும் செத்தார், நேருவும் செத்தார், இந்திராவும் செத்தார், ராஜீவ் காந்தியும் செத்தார், கருணாகரனும் செத்தார்' என்று குறிப்பிட்டு மேலும் சில அவதூறான கருத்தையும் கூறியுள்ளார். இது தொண்டர்கள் மத்தியில் மேலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விநாயகனை கைது செய்ய வலியுறுத்தி மாநில டி.ஜி.பி.யிடம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News