சினிமா செய்திகள்
null

காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடுவது தவறு.. நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துகிறார்கள்.. நடிகர் விஜய் பேச்சு

Published On 2023-06-17 13:46 IST   |   Update On 2023-06-17 16:07:00 IST
  • உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.
  • முடிந்த வரை படியுங்கள், எல்லோரையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது.

விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை நடிகர் விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும், பொதுத்தேர்வில் சாதனை படைத்த எனது நண்பா, நண்பிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய வணக்கம்.

நான் நிறைய ஆடியோ வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழாக்களில் பேசி இருக்கிறேன். இது போன்ற விழாவில் நான் பேசுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

எனது மனதுக்கு ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்தது போல் நான் உணருகிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான உங்களை போன்றோரை சந்திப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்.

என்னில் உன்னை காண்கிறேன் என்ற ஒரு ஈர்ப்பு இருக்கிறது. உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது எனக்கு பள்ளி நாட்கள் தான் ஞாபகத்துக்கு வந்து போகிறது. நான் உங்களைபோல அவ்வளவு புத்திசாலி மாணவர் இல்லை.

ஒரு ஜஸ்ட் பாஸ் மாணவன் தான். நான் நடிகர் ஆகவில்லை என்றால் அப்படி ஆகி இருப்பேன், இப்படி ஆகி இருப்பேன், டாக்டர் ஆகி இருப்பேன் என்று சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. என்னுடைய கனவெல்லாம் சினிமா, நடிப்புதான். அதை நோக்கிதான் என்னுடைய பயணம் போய்க்கொண்டி ருக்கிறது.

ஒரு வேளை... சரி அதை விட்டு விடுங்கள், அது இப்ப எதுக்கு... அது வேண்டாம்.

இதுபோன்ற ஒரு விழாவை ஏற்பாடு செய்ததற்கு ரொம்ப முக்கிய காரணம் சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு அழகான வசனம் நான் கேட்டேன். கார்டு இருந்தால் எடுத்துகிடுவானுங்க, ரூபா இருந்தா பிடுங்கிடுவானுங்க, ஆனா படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளவே முடியாது.

அது என்னை ரொம்ப பாதித்த வரியாக இருந்தது. இது 100-க்கு 100 உண்மை மடடும் அல்ல. இதுதான் யதார்த்தமும் கூட. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்பது ரொம்ப நாளாக எனது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதற்கான நேரம் தான் இது என்று நினைக்கிறேன்.

இதற்காக உழைத்த தமிழ்நாடு முழுக்க இருக்கிற ஆசிரியர்கள், ஒவ்வொரு ஊரிலும் முதல் 3 மாணவ-மாணவிகளை கண்டுபிடித்து இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து ஏற்பாடு செய்த எனது மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஆனந்துக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க்கையில் இலவசமாக கிடைப்பது அறிவுரை தான். அதுஉங்கள் எல்லோருக்கும் சுத்தமாக பிடிக்காது என்று எனக்கு தெரியும்.

படி, படி, படிப்பு, படிப்பு இந்த இரண்டையும் தாண்டி வேறு என்ன பேசுவது என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு பிடித்த 2, 3 விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு பிடித்து இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் விட்டு விடுங்கள். இது நட்பு கலந்துரையாடல் தான். போரடித்தால் சொல்லுங்கள். உடனே நிறுத்திக் கொள்கிறேன்.

பள்ளிக்கு செல்கிறோம். கல்லூரிக்கு செல்கிறோம் டிகிரி வாங்குகிறோம். அது மட்டுமே ஒரு முழுமையான கல்வி ஆகிவிடாது என்பதற்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன ஒரு விஷயம் தான். நாம் பள்ளிக்கு போய் படித்தது, கற்றுக்கொண்டது எல்லாமே மறந்த பிறகு எது எஞ்சி இருக்கிறதோ அதுதான் கல்வி என்று சொன்னார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று முதலில் புரியவில்லை. அப்புறம் போக போக கொஞ்சம் புரிந்தது. எனக்கே புரியும்போது உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாய் புரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் படிக்கும்போது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், பொருளியல் எல்லாவற்றையும் நீக்கி விட்டு எது மிஞ்சி இருக்கும். உங்களுடைய கேரக்டர், உங்களுடைய சிந்திக்கும் திறன்.

நாம் படிக்கணும், பரீட்சை இருக்கிறது. மதிப்பெண், தரவரிசை எல்லாமே முக்கியம்தான். ஆனால் அதைதாண்டி உங்களுடைய கேரக்டருக்கும், சிந்திக்கும் திறனுக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால்தான் அது ஒரு முழுமையான கல்வியாக ஆகும்.

உதாரணமாக கேரக்டர் பற்றி ஒரு அழகான வரி இருக்கிறது. நீங்கள் பணத்தை இழந்து விட்டால் நீங்கள் எதையுமே இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ ஒன்றை இழக்கிறீர்கள். ஆனால் குணத்தை இழந்து விட்டால் நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுகிறீர்கள்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவ்வளவு நாள் வரைக்கும் நீங்கள் உங்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன், வீட்டில் தங்கி பள்ளிக்கு போய் இருப்பீர்கள். இப்போது நீங்கள் வேறு வேறு ஊருக்கு போவீர்கள். வேறு பள்ளி, கல்லூரிகளில் உங்களுக்கு சீட் கிடைக்கும். விடுதிகளில் தங்கி படிப்பீர்கள். புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள்.

முதல் தடவையாக உங்கள் பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து வெளியில் போய் வேறு ஒரு வாழ்க்கைக்கு போகிறீர்கள். அங்கு ஒரு சுதந்திரம் ஒன்று கிடைக்கும் பாருங்க. அதை சுயகட்டுப்பாட்டுடன் பக்குவமாக கையாளுங்கள். ஒழுக்கம் என்று சொல்வதால் நீங்கள் வாழ்க்கையை என்ஜாய் செய்யக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. வாழ்க்கையை நன்றாக என்ஜாய் பண்ணுங்கள். அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

அதே நேரத்தில் உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.

நமது வாழ்க்கை நமது கையில்தான் என்பதை மனதின் ஒரு பக்கத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதை அவ்வப் போது எடுத்து ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

குணத்தை பற்றி பேசியதுபோல சிந்திக்கும் திறனை பற்றி பேசுவோம். என்னை விட உங்கள் அனைவருக்கும் தற்போதைய தகவல்கள் வரை நன்றாக தெரிந்திருக்கும். வாட்ஸ்அப், முக நூல், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட் என எல்லாவற்றிலும் வரும் தகவல்களில் முக்கால்வாசி போலியானவை தான். சமூக வலைதளத்தில் வரும் தகவல்களில் எதை எடுத்துக் கொள்ளலாம், எதை விட்டு விடலாம், எதை நம்பலாம், எதை நம்ப வேண்டாம், எது உண்மை, எது பொய் என்பதை கண்டறிய உங்கள் பாட புத்தகங்களை தாண்டி நீங்கள் படிக்க வேண்டும்.

சரி உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. நீயெல்லாம் அறிவுரை சொல்ல வந்து விட்டாய் என்கிறீர்களா?

நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு முன்பு வாசிக்கும் பழக்கம் இல்லை. சமீப காலமாக அது வந்திருக்கிறது. படிப்பதை விட படித்த விஷயத்தை யாராவது சொல்லி கேட்கும்போது எளிதாக கனெக்ட் ஆகும் என்பார்கள். நான் அந்த ரகம்.

என்னிடம் கதை சொல்ல வரும்போது பெரிய பைண்டிங் செய்த பைலில் கதையை கொண்டு வந்து படியுங்கள் என்பார்கள். நமக்கு அது சரிப்பட்டு வராது, நீங்கள் சொல்லுங்கள், எனக்கு எளிதாக கனெக்ட் ஆகும் என்று சொல்லுவேன். அந்த மாதிரி ரகத்தில் நான் இருந்தேன்.

முடிந்த வரை படியுங்கள், எல்லோரையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லா தலைவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்காரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், பெரியாரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், காமராஜரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை விட்டு விடுங்கள். இதுதான் இன்று உங்களுக்கான செய்தி.

நிறைய பேர் சொல்லி ஒன்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். உன் நண்பனை பற்றி சொல், நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்று. எனக்கு தெரிந்தது இப்போது அதெல்லாம் மாறி விட்டது என்று நினைக்கிறேன். நீ எந்த சமூக வலைதள பக்கத்தை பின் தொடர்கிறாய் என்று சொல், நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்பது தான் இன்றைய புதிய பழமொழி.

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து நல்ல நல்ல புதிய தலை வர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். ஆனால் நமது விரலை வைத்து நமது கண்ணையே குத்துவது என்று கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தான் இப்போது நாமும் செய்து கொண்டிருக்கி றோம்.

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். ஒரு ஓட்டு 1000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோமே, ஒரு தொகுதியில் 1.50 லட்சம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் ரூ.15 கோடி ஆகும். ஒருவர் ரூ.15 கோடி செலவு செய்கிறார் என்றால், அவர் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். பொதுவாக யோசித்து பாருங்கள்.

மாணவர்களின் பாடத் திட்டத்தில் இதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோரிடம் சென்று அப்பா, அம்மா இனிமே காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்லி பாருங்க.

சும்மா முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சொன்னால் அது கண்டிப்பாக நடக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் அடுத்தடுத்த வருடங்களில் முதல் முறை வாக்காளர்களாக வரப் போகிறீர்கள். இதை ஏன் நான் கனெக்ட் பண்ணி சொல்கிறேன் என்றால், இது எப்போது நடக்கிறதோ? அப்போதுதான் உங்களுடைய கல்வி முறையே முழுமை அடைந்த தாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

ஒரு சிறிய வேண்டுகோள். உங்களுடைய வகுப்பிலோ, உங்களுடைய தெருவிலோ தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் என்று இருப்பார்கள் அல்லவா? அவர்களுடன் அவ்வப்போது நேரம் செலவிடுங்கள். அவர்களுக்கு அந்த தைரியத்தை கொடுங்கள். தேர்வில் வெற்றி பெறுவது எவ்வளவு சுலபம் என்று எடுத்து சொல்லுங்கள்.

தோல்வி அடைந்த அவர்கள், நீங்கள் கொடுக்கும் தைரியத்தில் அவர்கள் வெற்றி அடைந்தால் அது நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசாக எடுத்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

தோல்வி அடைந்தவர்கள் சீக்கிரமாகவே வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் எந்த சூழ்நிலையிலும், எந்த தவறான முடிவுகளும் எடுக்காமல் வாழ்க்கையில் முன்னேறி செல்ல எனது வாழ்த்துக்கள். நீங்கள் நினைப்பதை தைரியமாக முன்னெடுத்து செய்யுங்கள்.

உங்களை அவமானப்படுத்த செய்ய ஒரு கூட்டம் கண்டிப்பாக இருக்கும். உன்னால் இது முடியாது, உன்னால் அது முடியாது, இது சரியில்லை, அது சரியில்லை, இது ஓடாது எல்லாம் சொல்வார்கள். அதையெல்லாம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உனக்குள் ஒருவன் இருப்பான், உனக்குள் ஒருத்தி இருப்பாள், அவன் என்ன சொல்கிறான், அவள் என்ன சொல்கிறாள் அதை மட்டுமே கேளுங்கள். வந்த அனைவருக்குமே நன்றிகள். வளர்ப்போம் கல்வி. வளர்க எங்கள் குட்டி நண்பா, நண்பிகள்.

இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.

Tags:    

Similar News