சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பை வீடியோ எடுத்த பொதுமக்களின் செல்போன்கள் பறிப்பு

Published On 2023-03-19 07:20 GMT   |   Update On 2023-03-21 05:54 GMT
  • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.
  • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். 


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.




இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர்.




இவர்களது பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால் தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் பொது மக்கள் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் படம் பிடித்தனர். இதையறிந்த தனியார் பாதுகாவலர்கள், பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பறித்து, அதில் பதிவாகி இருந்த புகைப்படங்களை நீக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.

Tags:    

Similar News