சினிமா செய்திகள்

மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை.. குஷ்பு உருக்கம்

Published On 2022-06-29 06:09 GMT   |   Update On 2022-06-29 06:09 GMT
  • மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
  • நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே வித்யாசாகர் இறப்புக்கு காரணம் என தகவல்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவருக்கு நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து உள்ளது.

அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போனது. மாற்று நுரையீரலுக்காக சென்னை உட்பட பல இடங்களில் மூளைச்சாவு அடைந்தவர்கள் உறுப்புகள் கிடைக்கிறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் உறுப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.

குஷ்பு 

மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.திரையுலகினர் பலரும் தங்கள் ஆறுதலை மீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை குஷ்பு, மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு குறித்து சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மீனாவின் கணவர் சாகர் இறந்த செய்தி அறிந்து மனமுடைந்து போனேன். நுரையீரல் பிரச்சனையால் அவர் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அவரை இழந்து வாடும், மீனா மற்றும் அவரது குழந்தைக்கு என் ஆழ்ந்த இரங்கல். வாழ்க்கை குரூரமானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மேலும் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என ஊடகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. அவர் 3 மாதங்களுக்கு முன்னர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது அவரது நுரையீரலில் பாதிப்பு தீவிரமானதால் தான் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். அதனால் இப்போது அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் எனக்கூறி அச்சத்தை கிளப்ப வேண்டாம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News