சினிமா செய்திகள்

KPY பாலாவுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்... ஒரே நொடியில் மாறிய பெண்ணின் வாழ்க்கை

Published On 2024-03-30 05:26 GMT   |   Update On 2024-03-30 05:26 GMT
  • சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார் பாலா.
  • வீடியோவை பார்த்த பலரும் பாலாவையும், ராகவா லாரன்சையும் பாராட்டி வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. அதை தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

காமெடியனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஒரு தொகுப்பாளர், நடிகர், சமூக அக்கறையாளர் என மிகவும் சிறப்பாக செயல்படும் பாலா தன்னால் முடிந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தனக்கு வரும் வருமானத்தில் இருந்து பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியவர்களை அரவணைப்பது, மாற்றுத்திறனாளிக்கு உதவுவது, போதிய மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ உதவி, புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பண உதவி இப்படி பலருக்கும் பல வகையில் உதவியுள்ளார் பாலா. சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பாலாவின் தன்னலமற்ற சேவையில் இணைந்துள்ளார் நடன மாஸ்டரும், நடிகருமான ராகவா லாரன்ஸ்.

கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை நடத்த அல்லல்படுபவர் முருகம்மாள். இவர் மின்சார ரெயிலில் சமோசா விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான் பல நாள் கனவாக இருந்தது. அதை தெரிந்து கொண்டு முருகம்மாளுக்கு புதிய ஆட்டோ ஒன்றை சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்துள்ளனர் பாலா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ்.

முருகம்மாளை சர்ப்ரைஸாக முகத்தை மூடிக்கொண்டு ஆட்டோவில் அழைத்து செல்கிறார் பாலா. சற்று நேரத்தில் அந்த ஆட்டோவை சுற்றி பல ஆட்டோக்கள் வட்டமிட ஒன்னும் புரியாத முருகம்மாளுக்கு பிறகு தான் தெரிகிறது, ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்தது பாலா என்று. பின்னர் பேசும் பாலா, இந்த ஆட்டோ ரூ.3 லட்சம். இதற்கு பாதி காசு நான் கொடுத்தேன். மீதி காசு கொடுத்தவரை பார்க்கிறீர்களா என கேட்க, காரில் வந்து இறங்குகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். பின்பு முருகம்மாள் லாரன்ஸை கட்டிப்பிடித்துக்கொள்கிறார். இதையடுத்து ஆட்டோ சாவியை வழங்க லாரன்ஸ் காலில் விழுகிறார் முருகம்மாள். மேலும், லாரன்சும், பாலாவும் சேர்ந்து முருகம்மாளுக்கு அவர் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வழங்க முருகம்மாள் கதறி அழுகிறார். இதையடுத்து பாலாவும், லாரன்சும் ஆட்டோவில் அமர முருகம்மாள் ஓட்டி செல்கிறார்.

இது தொடர்பான வீடியோவை ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பாலாவையும், ராகவா லாரன்சையும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News