அஜித், சூர்யா காதல் குறித்து ரமேஷ் கண்ணா கூறிய சுவாரசியமான தகவல்கள்
- ‘ப்ரண்ட்ஸ்’ படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 21-ந்தேதி 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது.
- சினிமாவில் இருக்கிறவர்கள் யாரையும் ‘லவ்’ பண்ண வேண்டாம்’ என அஜித்திடம் கூறினேன்.
விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. மறைந்த இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, மதன்பாப், ரமேஷ்கண்ணா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காமெடி காட்சிகளும் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் என்பது உள்பட படத்தில் இடம் பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.
இந்நிலையில் 'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 21-ந்தேதி 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த விழாவில் இயக்குநர் பேரரசு, ரமேஷ்கண்ணா, இ.வி.கணேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ரமேஷ்கண்ணா பேசியதாவது:-
படப்பிடிப்பில் சூர்யாவும், நானும் ரொம்பவும் சகஜமாக பழகிக் கொண்டிருப்போம். சந்தோசமான விசயம் என்னவென்றால் உடுமலை பேட்டையில் 'ப்ரண்ட்ஸ்' படப்பிடிப்பு, தெனாலி படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறும். நான் அந்த படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன்.
இரவு காரில் புறப்பட்டு 'ப்ரண்ட்ஸ்' படப்பிடிப்பில் இருந்து தெனாலி படப்பிடிப்புக்கு செல்வேன். அப்படி தெனாலி படப்பிடிப்புக்கு நான் போகும் போது சூர்யா, 'என்னிடம் ஜோதிகாவை கேட்டதாக சொல்லுங்க' என சொல்ல சொல்வார். நான் அங்கு போய் ஜோதிகாவிடம் 'சூர்யா உங்களை கேட்டதாக சொல்ல சொன்னார்' என சொல்வேன். அதுபோல் அங்கிருந்து புறப்படும் போது ஜோதிகா, 'என்னை பற்றி சூர்யாவிடம் சொல்லுங்கள் என சொல்வார்'. அதை நான் சூர்யாவிடம் சொல்வேன். அப்படி காதலை வளர்த்த ஒரு படம் 'ப்ரண்ட்ஸ்'.
அதுபோல் அமர்க்களம் படப்பிடிப்பில் அஜித்திடம், 'சினிமாவில் இருக்கிறவர்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டாம். குடும்ப பெண்ணை பார்த்து திருமணம் செய்யுங்கள்' என கூறினேன். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை இயக்குனர் சரண் 'மானிட்டரில்' பார்த்துக் கொண்டிருந்தார். இதையடுத்து என்னை 'இங்க வாங்க' என கூப்பிட்டார். நானும் அவரிடம் சென்றேன். என்னிடம் 'சரண், இருவரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க' என கேட்டார். அஜித்துக்கு சில அறிவுரைகள் சொன்னேன்' என அவரிடம் கூறினேன். என்ன அறிவுரை என கேட்டார். சினிமாவில் இருக்கிறவர்கள் யாரையும் 'லவ்' பண்ண வேண்டாம்' என அஜித்திடம் கூறினேன்.
இதை கேட்ட சரண், 'அடப்பாவி, அஜித்தும், ஷாலினியும் காதலித்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் திருமணம்' என சொன்னார். உனக்கு இந்த படம் வேணுமா? வேண்டாமா? இதோடு விட்டுறு' என சொன்னார். அதோடு வாயை பொத்திக் கொண்டு வந்து விட்டேன் என சொல்லி சிரித்தார் ரமேஷ் கண்ணா.
அஜித், சூர்யா காதல் குறித்து ரமேஷ் கண்ணா பேசிய சுவாரஸ்ய கருத்துக்கள் விழாவை கலகலப்பாக்கியது.