சினிமா
உருண்டு உருண்டு சிரிச்சேன் - ஷங்கர் முதல் தமன் வரை... பிரபலங்களின் பாராட்டு மழையில் டாக்டர்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் பல்வேறு தடைகளை கடந்து நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் டாக்டர் படத்தை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் டாக்டர் படக்குழுவை பாராட்டி இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இந்த கொரோனா காலகட்டத்தில் டாக்டர் எங்களுக்கு சிறந்த சிரிப்பு மருந்தை கொடுத்திருக்கிறார். அனைவரையும் மகிழ்வித்த இயக்குனர் நெல்சனுக்கு பாராட்டுக்கள். குடும்பங்கள் கொண்டாடும் படியான பொழுதுபோக்கு படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. திரையரங்க அனுபவம் மீண்டும் திரும்பி உள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என பாராட்டி உள்ளார்.
ஷங்கர், அதிதி
ஷங்கரின் மகள் அதிதி வெளியிட்டுள்ள பதிவில், “டாக்டர் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். அற்புதமாக இருந்தது” என குறிப்பிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், அவர் ஹீரோயினாக அறிமுகம் ஆக உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து, கலக்குங்க என பதிலளித்துள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளதாவது: “குடும்பத்துடன் டாக்டர் படம் பார்த்தேன். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளித்த இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும், சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
சுசீந்திரன், அஸ்வத் மாரிமுத்து
ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறுகையில், “உருண்டு உருண்டு சிரிச்சேன். கண்ல தண்ணீ வர வர சிரிச்சேன். சிவகார்த்திகேயன் வசீகரிக்கிறார். இயக்குனர் நெல்சன் சிறந்த எழுத்தாளர். அனிருத் படத்தின் முதுகெழும்பு. விஜய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு அற்புதம். யோகிபாபுவும், டோனியும் சிரிப்பு மருத்துவர்கள்” என பதிவிட்டுள்ளார்.
கே 13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “டாக்டர் படத்தின் வெற்றி மிக முக்கியமானது. ஒரு முன்னணி நாயகன் டார்க் காமெடி போன்ற ஒரு ஜானர் செய்வதும், அது வெற்றி அடைவதும் பல இயக்குனர், எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும் விஷயம். இதை ஒரு கேம் சேஞ்சர் ஆக பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பரத் நீலகண்டன், ரத்னகுமார்
ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் கூறுகையில், “டாக்டர் நின்னு பேசும். சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் இது சிறந்த படம். அனிருத் வழக்கம் போல் பின்னணி இசையில் மாஸ் காட்டி இருக்கிறார்" என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ள பதிவில், “ரியல் டாக்டர்கள் இரவு பகலாக போராடி கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி உள்ளனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் திரையரங்குகளை குணப்படுத்தி உள்ளது” என பாராட்டி உள்ளார்.
தமன், அர்ச்சனா கல்பாத்தி
பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ளதாவது: “இத்தகைய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். காத்திருந்து திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.