சினிமா
தி பேமிலி மேன் 2 வெப் தொடர் போஸ்டர், பாரதிராஜா

சமந்தாவின் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை உடனே நிறுத்த வேண்டும் - பாரதிராஜா அறிக்கை

Published On 2021-06-07 06:55 GMT   |   Update On 2021-06-07 06:55 GMT
தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடு ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் உருவாக்கியிருப்பதாக பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமந்தா நடிப்பில் வெளியாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு, அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. 

அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த, போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும், தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும், தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். 


பாரதிராஜா

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்”. இவ்வாறு பாரதிராஜா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News