சினிமா
ஏன் நடிகைகளிடம் மட்டும் அந்த கேள்வியை கேட்கிறார்கள்?... ஆத்திரம் வருகிறது - காஜல் கோபம்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை. திருமணம் அவரவர் சொந்த வாழ்க்கை. சினிமாவில் நடிப்பது எனது தொழில். கடந்த வருடம் எனக்கு திருமணம் ஆனதில் இருந்து தொடர்ந்து கைவசம் படங்கள் இருக்கிறது.
திருமணம் ஆன பிறகு எல்லா பெண்களும் அவரவர் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டது. வேலைக்கு ஏன் வந்தீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை. ஆனால் திருமணமான நடிகைகள் மீண்டும் நடித்தால் மட்டும் திருமணம் முடிந்துவிட்டதே இன்னும் நடித்துக்கொண்டே இருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்கிறார்கள்.
திருமணமானால் நடிப்பது தவறா? இந்த ஆண்டு நான் நடித்த 4 படங்கள் திரைக்கு வர உள்ளன. அதை சொல்லியாவது அவர்கள் வாயை மூட வேண்டும் என்று எனக்கு ஆத்திரம் வருகிறது.'' இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.