சினிமா
மறைந்த தயாரிப்பாளருக்கு உதவும் விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் மறைந்த தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு உதவ முன் வந்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் பெரும் சாதனை படைத்த 'சின்னத்தம்பி' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்றது.
அப்போது நடிகர் விஷால் தன்னுடைய மேலாளரை அனுப்பி மறைந்த தயாரிப்பாளர் பாலு தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்த படத்தின் பூஜை ஸ்டில்லைக் காட்டி உறுதி ஒன்றை அளித்துள்ளார்.
மார்ச் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தி, ஆறு மாதத்திற்குள் நடத்தி முடித்து அந்தப் படம் மூலம் வரும் லாபத் தொகை அனைத்தையும் மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தயாரிப்பாளர் பாலு, விஷாலுக்கு அட்வான்ஸ் ஆக வழங்கிய தொகையான 50 லட்ச ரூபாயையும் விஷால் திருப்பி கொடுத்து இருக்கிறார்.