சினிமா
புதுப்பேட்டை கூட்டணியின் புதிய படம் ஆரம்பமானது - செல்வராகவன் அறிவிப்பு
புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி, தற்போது மீண்டும் இணைந்துள்ள படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்கான ஸ்டில்ஸ் ஷூட்டிங் தொடங்கி உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் செல்வராகவனுடன் இணைய உள்ள நடிகர் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக தயாராக உள்ள இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிட உள்ளனர்.